Saturday, October 16, 2010

கடவுள் எங்கே? (கண்டால் வணங்குங்கள்)

      கண்ணிலாதான் கண்ட களிறு !
ஹ  .. .ஹ ... ஹ ...ஹ ..
ஹா.. ஹ ..ஹா..... ஹ

தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !

(களிறு = யானை)


நல்லாயன்,
நல்லவன்,
எல்லாம் வல்லவன்,
தூணுள்ளும் துயில்பவன்,
மிகப்பெரியவன் !

பானை வயிறவன் !
பகுதி பாவை இவன் !
குறுக்கிலும் நெடுகிய
கம்பத்தில் குற்றமியற்றிய
கொடும்பாவிகளுக்காய்
குருதி சுரந்தவன்!

சமஸ்கிருதத்தில்
சாய்ந்து உறங்குபவன் !
எபிரேயத்தில்
ஏகாதிபத்தியம்
செய்பவன் !
உதித்தானவன் !
உருதுக்குள் மட்டும்
உறைபவனிவன் !


மெழுகு வர்த்தி,
பேரீச்சம் பழம்,
தேங்காய்,
உப்பு,
பழம் பாயசம் 
காணிக்கையாக
கையேந்துபவன் !

குர் ஆனிலும்
கீதையிலும்
பழைய புதிய
ஏற்பாடுடையவன் !
ஏற்புடையவன் !



தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !


கண்ணிலாதவன் !
காதும் கேளாதவன் !
பிறவி ஊமை !

செத்துப்போனவன் !
செயலற்றவன் !
கல்லறைக்குள்ளிருந்தும்
காசு பார்ப்பவன் !


தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !


சலாமிட்டு
கைகூப்பி
மண்டியிடுபவன் !

குலாம் கலாம்
ஜோசப் பீட்டர்
முனி ஆண்டி !

பானு பேகம்
பாகம்பிரியாள்
இருதய மேரி !

இமயப்பனியுள்
இமையாதுறைபவன் !


கொட்டு முரசு 
கொட்டி 
கோவிலில்
ஆடு வெட்டினால் 
அறியாதவனுக்கு 
அவன் ஆண்டவன் 

ஆட்டுக்கு ......?

கல்லெறிந்து
கருஞ்சைத்தானைக்
கொன்றால் 
கடவுள் காப்பாற்றப்படுவான் 
நெருக்கடியில் 
நொந்து தவிப்பவனை .......?

ரத்தத்தையும் 
சதையையும்  
நாக்குக்கடியில் 
சுவைத்துண்பதால்
சிலுவையில் 
செத்தவன் 
சினம் தணிவதில்லை !

நல்லவர்களும் 
ஞானிகளும் மட்டுமே 
கடவுளை 
காணமுடியுமென்று 
உணரப்பட்டதாக -
உளறப்பட்டதால் 
எல்லோரும் 
தாடி வைக்கிறார்கள் !
ஞானிகளாக 
நடிக்கிறார்கள் !

கேடிகள் 
கோடிகளானதால்
கோவில் உண்டிகள் 
காட்டருவிகளாய்
கொட்டுகின்றன !

ஞானக்குளிப்பு 
நன்றாய் குளித்தாலும் 
மார்பின் குறுக்கே 
மதக்கயிறிட்டாலும்
உறுப்பின் ஒரு முனையை 
உள்ளறுத்தாலும்
கடவுள் இனிமேல் 
கட்டாயம் வரமாட்டான் !


இறைவன் இருந்தால் 
இறைவனாய் நினை !
சடங்கிற்க்குள்
சமாதியாக்கிவிடாதே !


தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !

மதத்துள் 
மயங்காதே !
மனிதனாய் வாழ் !


பயம் 
பற்றிகொள்வதால் தானே 
படைத்தவனை 
வணங்குகிறாய் !

படைத்தவன் 
இறைவனென்றால் 
பெற்றோரை வணங்கு !

இறைவன் 
எங்கும் இல்லை !
உன்னுள் நீ !
                      
                    - கண்ணிலாதவன்-

Thursday, October 7, 2010

கருத்தரிக்கமாட்டேன் !


மலடி என்று
மனித மாக்கள் என்னை
மறுத்து விடினும்  ...........

உடல் வேட்கை
உன்மத்தமாகி என்னுள்
உறங்கா விடினும் .........

தாய்மையின்
தூய்மை உணராது
துவண்டு விடினும்  ................

நான் .........

கருத்தரிக்கமாட்டேன் !

#               #               #               #  

ஆதி முதல்
அடக்கம் வரை
அசூயைக்குள் நீ
அந்தமாகாதிருப்பதற்காக.......

அறிவெனும்
அனர்த்ததிற்குள் உன்
ஆன்மா
அலையாதிருப்பதற்காக.......

பணமெனும்
பிணத்துக்குள் உன்
சிந்தை
சிதிலமாகாதிருப்பதற்காக.......

உறவெனும்
உறைக்குள் உன்
உணர்வுகள்
உழலாதிருப்பதற்காக.......

நல்லவர் போன்ற
நயவஞ்சகத்துக்குள் உன்
நாணயம்
நாசமாகாதிருப்பதற்காக.......

பிறவியின்
பேதமையால் நின்
பெற்றோரை
நிந்திக்காதிருப்பதற்காக.......

நான் ..........

கருத்தரிக்கமாட்டேன் !

#               #               #               #

உலக உருண்டையை
உருத்தறித்து
உண்மை உலகை
உருவாக்கும்வரை........

நான் .....


கருத்தரிக்கமாட்டேன் !

#                #               #               #

மனிதனை மனிதன்
அழிக்கும் மண்ணில் - உன்னை


கருத்தரிக்கமாட்டேன் !

இல்லாத சாதிக்குள்
இறைவனை இணைக்கும்
இழிவான உலகில் - உன்னை


கருத்தரிக்கமாட்டேன் !

இல்லாத இறைவனுக்காக
இருப்பவர்களை மாய்க்கும்
இகழ்வான உலகில் - உன்னை


கருத்தரிக்கமாட்டேன் !

#               #              #               #

என்
உணர்வுக்குள்ளும்
உடலுக்குள்ளும்
உயிருக்குள்ளும்
உருவாகாமல்


உறங்கிவிடு !


ஒளிந்துவிடு !


ஒழிந்துவிடு !

#              #               #               #

இந்த
மாய உலகில் உனக்கு
மறுபிறவி வேண்டாம் !
மகனே !


அருவத்தை
உருவத்துள்
அடக்கும்
அற்பப் பிறவி வேண்டாம்!


இந்த
பிரபஞ்சம் அறியாத
புதிதொரு
பிரபஞ்சத்தில் என்றாவது
ஒருநாள்
பிறக்கவைப்பேன்!
பொறுத்திரு  !
                                      - ஒரு பிரபஞ்ச தாய் -

Monday, September 20, 2010

மனைவி அமைவதெல்லாம் .........

"இந்தாங்க சாவி 
மறந்துட்டீங்க..."

சிரித்தேன் !

"சாப்பாடு பாத்திரம் 
எடுத்துக்கலையா ? ....."

சிலிர்த்தேன் !

பைக்கை உதைத்து
அலுவலகம் வந்தேன் !

"ஹலோ ! 
மறந்துடாம மத்தியானம் 
மருந்து சாப்பிடுங்க..."

பணியில் மூழ்கினேன் !

"மணி 3 00  இன்னும் 
நீங்க சாப்பிடலையா ?
சீக்கிரம் சாப்பிடுங்க"

"ஒரு டீ குடிச்சுட்டு 
வேலை பாருங்க  
4௦௦ 00 மணி ஆகுது 
தலை வலிக்கும் .."

"இவ்வளவு 
சோர்வா வர்றீங்க.." 
முந்தானை எடுத்து
முத்தான வியர்வை
துடைத்தாள்!

என் சட்டை களைந்தாள்!

"சுடுநீர் வச்சுருக்கேன் 
குளிச்சுட்டு வாங்க"

தலை துவட்டி
முடி கோதினாள்!

"ஆ .....ஆ ......"

"சூரியன் முகத்தில் விழுறது 
தெரியாம தூக்கத்த பாரு "

இதெல்லாம் கனவா ?

வேக வேகமாக
வேலைக்கு புறப்பட்டேன்!

Tuesday, September 14, 2010

நீ அழகு.....



நீ 
அழகு!
நிலா அழகு!
அதற்காக
நிலாவோடு
உன்னை ஒப்பிடமுடியாது !


#          #         #          #


நீ
மென்மை!
அனிச்சமும் மென்மை!
அதற்காக
அனிச்ச மென்மையை
உன்னோடு ஒப்பிடமுடியாது !


#          #          #          #


உன்
ஸ்பரிசம் மோகம்! 
தென்றல் மோகம்!
அதற்காக
தென்றலோடு
உன் ஸ்பரிசத்தை ஒப்பிடமுடியாது !


#          #          #          #


உன்
கூந்தல் கருமை
மேகக்குளுமை
என்று கூறமுடியாது !


#          #          #          #


உன்
கழுத்து அழகு!
என்பதற்காக
சங்கோடு ஒப்பிடமுடியாது


#          #           #          #


உன்
இதழ்கள்
சிவப்பென்பதற்காக
மாதுளை
முத்துக்களோடு ஒப்பிடமுடியாது!


#          #          #          #
 
உன்
நாசி அழகு!
அதற்காக
சங்குப்பூவோடு ஒப்பிடமுடியாது!


#          #          #          #


உன்
கண்பாவை அழகு !
என்பதற்காக
திராட்சை கனிகள்
என்று வர்ணிக்கமுடியாது !


#          #          #          #


இவை
எவற்றோடும்
உன்னை ஒப்பிடமுடியாது !


ஏனென்றால்....


இவை
எவற்றோடும்
ஒப்பிடமுடியாத
ஒப்பற்ற அழகு
நீ  !!


#          #          #          #